சிறப்பு பள்ளிக்கு மானிய ஊதியம் தொடர்ந்து கிடைத்திடரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது


சிறப்பு பள்ளிக்கு மானிய ஊதியம் தொடர்ந்து கிடைத்திடரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 3:56 AM GMT (Updated: 29 April 2021 3:56 AM GMT)

சிறப்பு பள்ளிக்கு மானிய ஊதியம் தொடர்ந்து கிடைத்திட ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் இணை மறுவாழ்வு அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சேலத்தில் கைது செய்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி கடந்த 2016-ம்‌ ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைவராக விஜயகுமாரும் (வயது 43), செயலாளராக அவரது மனைவி உமா மகேஸ்வரியும் இருந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் 2 சிறப்பு ஆசிரியர்களுக்கும், ஒரு பிசியோதெரபிஸ்டுக்்கும், 2020-21-ம் ஆண்டிற்கான மானிய ஊதியமாக ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி வழங்கி உள்ளது.

இதற்கிடையே அந்த மானிய ஊதியம் தொடர்ந்து கிடைத்திட அதில் பாதி தொகையான ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்தை நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியும்(53) , இணை மறுவாழ்வு அலுவலர் சேகரும(48)் சிறப்பு பள்ளி நிர்வாகி விஜயகுமாரிடம் லஞ்சமாக கேட்டு உள்ளனர். அதை தர மறுத்தால் மானிய ஊதியத்தை நிறுத்தி விடுவோம் எனவும், கிடைத்த மானிய ஊதியத்தையும் திரும்ப செலுத்த நேரிடும் எனவும் விஜயகுமாரை அவர்கள் மிரட்டி உள்ளனர்.

ரூ.2½ லட்சம் லஞ்சம்

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமார், இதுபற்றி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இணை மறுவாழ்வு அலுவலர் சேகரின் வீட்டிற்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் விஜயகுமார் சென்றார்.

பின்னர் அங்கிருந்த இணை மறுவாழ்வு அலுவலர் சேகரிடம் ரூ.2½ லட்சத்தை விஜயகுமார் வழங்கி உள்ளார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியின் வீட்டிற்கு சென்ற சேகர், லஞ்ச பணத்தை பங்கிட்டு ஜான்சியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதற்கிடையே சேகரை பின்தொடர்ந்து சென்று, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் மற்றும் போலீசார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் இணை மறுவாழ்வு அலுவலர் சேகர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.2½ லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச வழக்கில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல பெண் அதிகாரி மற்றும் இணை மறுவாழ்வு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story