'கொரோனாவில் இருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்' மு.க.ஸ்டாலின் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு வேண்டுகோள்


கொரோனாவில் இருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் மு.க.ஸ்டாலின் ‘வீடியோ பதிவு வெளியிட்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 April 2021 4:39 AM GMT (Updated: 29 April 2021 4:39 AM GMT)

கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டு கொரோனாவில் இருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என்று மு.க.ஸ்டாலின் ‘வீடியோ' பதிவு வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், ‘நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘வீடியோ' பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது:-

ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக்கொள்கிறேன்.

தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்துகொள்ளுங்கள். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். மிகத்தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரை கலந்தாலோசனை செய்த பிறகு தடுப்பூசியை பயன்படுத்துங்கள். முககவசங்களை தொடர்ந்து அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் அருந்துங்கள்.

மருந்தால் மட்டுமல்ல, உணவு பொருளாலும் நோய்த்தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவ குணங்கள் கொண்ட பலவற்றையும் நமது உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் இருக்கிறது. அந்த பாரம்பரியத்தை தொடந்து பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம். நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி

கொரோனா முதல் அலை பரவியபோது அதை தடுக்க தவறியது மத்திய, மாநில அரசுகள். அந்த பரவலை கட்டுப்படுத்தவும் அந்த இரண்டு அரசுகளும் தவறியது. முதல் தவறையாவது திருத்திக்கொண்டு அதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக்கொண்டார்களா? என்றால் இல்லை. முதல் தவறை விட பெரிதாக இரண்டாவது தவறைச் செய்துவிட்டார்கள். முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. அதன் விளைவைத்தான் நாம் கண்ணுக்கு முன்னால் இப்போது பார்க்கிறோம்.

‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே மொழி' என்று பேசும் பா.ஜ.க. ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு மாநில அரசுகள் தங்களிடம் இருந்த வரி போடுகிற அதிகாரங்களையும் பெருமளவிற்கு இழந்துவிட்டன. எனவே இந்தச் சுமையை மாநில அரசுகள் சுமப்பது மிகக் கடினம்.

எனவே இந்தக் கடினமான காலத்தை சமாளிக்க, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முக்கியமாக அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற அறிவிப்பை பிரதமர் அறிவித்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மக்கள் இயக்கமாக...

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக 'ஸ்டெர்லைட்' ஆலையை தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மட்டும் திறக்கலாம். நான்கு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்ததும் ஆலையை நிரந்தரமாக மூடி விடலாம் என்று மனிதாபிமான அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சொன்னோம். அப்படி தயாரிக்கப்படுகின்ற ஆக்சிஜனையும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம்.

கொரோனா பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். முககவசம் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடாது தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய 2 முக்கிய இலக்கை கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமையப்போகிற தி.மு.க. அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுடைய அமைதியான வாழ்விற்கும் தேவையான அனைத்தையும் அமையப்போகிற தி.மு.க. அரசு செய்யும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

அலட்சியம் வேண்டாம்

அதுவரை தற்போதைய காபந்து அரசு மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மக்களின் உயிரை பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக்கேட்டு கொள்கிறேன். மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். எப்போதும் மக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Next Story