உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம்


உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 29 April 2021 9:12 AM GMT (Updated: 29 April 2021 12:31 PM GMT)

உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை: 

தமிழக சட்டசபை தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா். வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்களும் வரவுள்ளனா்.

மேலும் யாரெல்லாம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரவுள்ளனரோ அவா்கள் அனைவருக்கும் முக கவசம், முகத்தை மூடும் பிளாஸ்டிக் கவசம் ஆகியன கட்டாயமாகும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் தற்போது மேலும் பல கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம். அதிக வாக்குச்சாவடிகளைக் கொண்ட தொகுதிகளில் மேசைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேசைகள் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு பிறப்பித்து தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். 

தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2-ம் தேதி வாக்கு எண்னிக்கை நடக்கும்.  உடல் வெப்பம்  98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் உடல்வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுப்படுத்தப்பட உள்ளனர் என கூறினார்.

Next Story