பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 May 2021 1:13 AM GMT (Updated: 1 May 2021 1:13 AM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக நடைபெறும் இந்த விவகாரம் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

காணொலி காட்சி வாயிலாக நடந்த இந்த விசாரணையில்,

அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி வாதிடும்போது,‘சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை தமிழக உள்துறைச் செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது’ என்றார். அப்போது சிறப்பு டி.ஜி.பி., சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த அறிக்கையின் நகலை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான போலீஸ் புலன் விசாரணையை மட்டுமே கண்காணிக்கிறது. அதனால், நகல் வழங்க உத்தரவிட முடியாது’ என்று கூறினார்.

பின்னர், இந்த வழக்கின் புலன் விசாரணையை 4 முதல் 6 வாரங்களுக்குள் முடித்து, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 


Next Story