தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது; அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்; ஐகோர்ட்டு கருத்து


தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது; அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்; ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 1 May 2021 1:20 AM GMT (Updated: 1 May 2021 1:20 AM GMT)

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது, இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அமைச்சர் வழக்கு

தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும். நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதேபோல, வாக்கு எண்ணிக்கையின்போது பத்திரிகையாளர்களை அனுமதிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஏற்க முடியாது

அப்போது, மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் முகவர்கள் உள்ளிட்டோர் 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ஏற்க முடியாத ஒன்று என்றார். மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, கரூர் தொகுதியில் போட்டியிடும் 77 வேட்பாளர்களில் வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்களை அனுப்ப 21 வேட்பாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மற்ற 56 பேரும் முகவர்களை அனுப்ப விரும்பவில்லை என்று கூறினார்.

திருப்தி அளிக்கிறது

அப்போது நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை பணி எப்போது முடியும் என்று கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல் ராஜேஷ் திரிவேதி, வாக்கு எண்ணும் நாளில் மாலை 6 அல்லது 7 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். மறுவாக்கு எண்ணிக்கை கோரும்பட்சத்தில் அதிக நேரமாகலாம். தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகள் மீது பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கைக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.

முன்னுதாரணமாக...

மேலும், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது. இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்தி, விசாரணையை மே 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story