கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்குவோம்: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் உறுதி


கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்குவோம்: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
x
தினத்தந்தி 1 May 2021 1:38 AM GMT (Updated: 1 May 2021 1:38 AM GMT)

தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இரங்கல்

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம், இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி.ஆனந்த் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. குணச்சித்திர நடிகர் செல்லத்துரை மறைவு மிகுந்த வருத்தத்தை தரக்கூடியது. இவர்களுடைய மறைவுக்கு அ.தி.மு.க. சார்பாகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பாகவும் இரங்கல் தெரிவிக்கிறேன்.

இமாலய வெற்றி

தமிழகத்தில் நேற்று முன்தினம் கருத்துக்கணிப்பு என்ற போர்வையில் கருத்துத் திணிப்பு நடைபெற்றிருக்கிறது. கருத்துத் திணிப்புகளை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்பது வரலாறு.

கருத்து கணிப்புகளை கருத்து திணிப்பாகத்தான் அ.தி.மு.க.வினரும் மக்களும் பார்க்கின்றனர். லட்சக்கணக்கில் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் 200 பேரிடம் ஒரு பேப்பரை கொடுத்து ‘டிக்’ செய்ய சொல்லி எடுக்கும் கருத்துக்கணிப்புகள் என்றுமே நிறைவேறியதில்லை.

நாங்கள் தான் வருவோம்

கடந்த முறை தேர்தலில் கருத்துக்கணிப்புகளின் போது, ‘இது உண்மையான தேர்தல் முடிவு அல்ல, பொறுத்திருந்து பாருங்கள்’ என ஜெயலலிதா சொன்னார். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். 2-ந் தேதி (நாளை) நாங்கள் தான் வருவோம். வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் முழுமையாக இருந்து வெற்றி செய்தியுடன் வாருங்கள்.

தபால் வாக்குகளை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைதான் பின்பற்ற வேண்டும். மாறுதல் கூடாது. எங்களின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டனர்.

கற்பனை கனவுடன் தி.மு.க.

தி.மு.க. முடிவுக்கு முன்னரே வெற்றி போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால், அது ஏமாந்த நரி கதையாகத்தான் முடியும். கற்பனையான கனவுடன் தி.மு.க. இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி அமையும். அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. குண்டர்கள் மூலம் சதித்திட்டம் தீட்ட தி.மு.க. முயற்சிக்கும். அதனை முறியடிக்கும் வகையில் தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story