கன்னியாகுமரியில் கனமழை; வெயில் தணிந்ததில் மக்கள் மகிழ்ச்சி


கன்னியாகுமரியில் கனமழை; வெயில் தணிந்ததில் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 May 2021 9:31 AM GMT (Updated: 1 May 2021 9:31 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் 4-ந்தேதி தொடங்கும் நிலையில் திருச்சி, மதுரை, கடலூர், கரூர், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது.

இதேபோன்று, தலைநகர் சென்னையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 1-ந்தேதி (இன்று), 2-ந்தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி (இன்றும், நாளையும்) நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  கோடை வெயிலின் உக்கிரம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story