வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: அமைச்சர் உதவியாளருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. விசாரணை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: அமைச்சர் உதவியாளருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. விசாரணை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 1 May 2021 7:44 PM GMT (Updated: 1 May 2021 7:44 PM GMT)

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக மின்சாரத்துறை அமைச்சரின் தனி உதவியாளர் (பி.ஏ.,) மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் எம்.சவுந்தரபாண்டியன். இவர், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இருப்பு கணக்கீட்டாளராக ஓசூர், சிப்காட்டில் வேலை செய்கிறேன். கடந்த 2016-ம் ஆண்டு அண்ணா தொழில் சங்கத்தின் மாவட்ட பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அப்போது பலர் என்னிடம் வந்து, பதவி உயர்வு, இடமாறுதல், பணி நியமனம் பெற உதவி கேட்டனர்.

இந்த உதவிகளை எல்லாம் பணம் பெறாமல் செய்து கொடுத்தேன்.

இதன்படி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் வேலை வாங்கி தரும்படி ஆனந்தி, கலையரசி, சிங், சதீஷ்குமார், உதயகுமார், சரவணன் என்று 15 பேர் என்னிடம் உதவி கேட்டனர்.

அவர்கள் அனைவரையும், மின்சாரத்துறை அமைச்சரின் தனி உதவியாளரிடம் (பி.ஏ.) அறிமுகம் செய்து வைத்தேன். அவரும், உதவி செய்வதாக கூறினார். போட்டி தேர்வில் வெற்றி பெற்று வந்தால், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் நடத்தும் நேர்காணலில் உதவி செய்வதாக கூறினார்.

ஆனால், எனக்கு தெரியாமல், இவர்கள் அனைவரும் அமைச்சரின் தனி உதவியாளரிடம் பணம் கொடுத்துள்ளனர். பின்னர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று அவர்கள் நேர்காணல் தேர்வில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், ஆனந்திக்கு மட்டும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அதை போலியானது என்றும், அதிகாரிகள் மோசடி செய்து விட்டனர் என்றும் தெரிந்தது.

இந்த விவகாரத்தில், என்னிடம் விசாரணை நடத்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி நேரில் ஆஜராகும்படி மின்சார கழகம் நோட்டீஸ் அனுப்பியது. நான் ஆஜராகவில்லை. இதையடுத்து, என்னை பணியிடை நீக்கம் செய்தது. இந்த விசாரணையில் நான் கலந்து கொள்ள தயாராக உள்ளேன். ஆனால், அவர்கள் சட்டப்படி விசாரணை நடத்த மாட்டார்கள்.

அதேநேரம், நான் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக மகேஸ்வரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது மோசடி சட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டி, பணத்தை கொடுக்கும்படி போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் நேரடியாக அமைச்சரின் தனி உதவியாளர் மீது குற்றம் சாட்டுகிறார். பலர் பணத்தை எல்லாம் அவர் தான் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றுகிறேன் என்றார்.

அரசு வக்கீல் டி.சண்முகராஜேஷ்வரன், மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்காத நீதிபதி, “இந்த மோசடி வழக்கு ஆவணங்கள் அனைத்தையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், தர்மபுரி போலீசார் ஒப்படைக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு குறித்துசி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

Next Story