ஐகோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வாக்கு எண்ணிக்கையின்போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


ஐகோர்ட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வாக்கு எண்ணிக்கையின்போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 May 2021 9:46 PM GMT (Updated: 1 May 2021 9:46 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்களும், கட்சியின் மீது பேரன்பு கொண்ட நல்லோரும், 2-5-2021 அன்று (இன்று) சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் போதும், முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்திலும், அண்ணா வழியில் அமைதியுடனும்; எம்.ஜி.ஆர். வழியில் விழிப்புடனும், ஜெயலலிதா வழியில் ஆற்றலுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா பெருந்தொற்று விரைந்து பரவிவரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது; அது சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை மறவாதீர்கள்.

வாக்கு எண்ணிக்கையின்போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும், அரசியல் கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக திகழும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு நொடியும் நெறிகளை மீறிவிடக்கூடாது. வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார், யார் செல்ல வேண்டும்; வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாளாகையால் அதனை எப்படி முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் அரசுடன் ஒத்துழைத்து, அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்று கட்டுப்பாட்டுடனும், வெற்றி கொண்டாட்டங்களை மிக, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டும் அடக்கத்துடனும் நடத்திட வேண்டும். பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

தேர்தல் ஆணையமும், சென்னை ஐகோர்ட்டும் நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூறியுள்ள அறிவுரைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“பதவி வரும்போது பணிவு வர வேண்டும்; துணிவும் வரவேண்டும் தோழா, அன்பே நம் அன்னை; அறிவே நம் தந்தை” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் நம்மை வழி நடத்தட்டும். நாளை நமதே.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story