‘டாஸ்மாக்' கடைகள் 2 நாட்கள் அடைப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை - மதுபானங்களை சேமித்து வைத்த மதுபிரியர்கள்


‘டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் அடைப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை - மதுபானங்களை சேமித்து வைத்த மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 1 May 2021 11:37 PM GMT (Updated: 1 May 2021 11:37 PM GMT)

'டாஸ்மாக்' கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறையால் தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

சென்னை, 

கொரோனா 2-வது அலை காரணமாக ‘டாஸ்மாக்' கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மது விற்பனை நேரம் இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 9 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமைகளில் 'டாஸ்மாக்' கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. எனவே சனிக்கிழமை அன்று மதுவிற்பனை படுஜோராக இருந்து வருகிறது.

இந்தநிலையில் மே 1-ந்தேதி தொழிலாளர் தினம் (நேற்று), முழு ஊரடங்கு (இன்று) என 2 நாட்கள் ‘டாஸ்மாக்' கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 2 நாட்களுக்கும் சேர்த்து மதுவை வாங்கி வைத்துவிட வேண்டும் என்பதில் மதுபிரியர்கள் கவனம் செலுத்தினர்.

இதன் காரணமாக ‘டாஸ்மாக்' கடைகளில் நேற்றுமுன்தினம் மது விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் ‘டாஸ்மாக்' கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. மதுபிரியர்கள் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுவகைகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

ஒரு சில ‘டாஸ்மாக்’ கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதுவை சேமித்து வைக்க வேண்டும் என்ற மதுபிரியர்கள் மனநிலையால் ‘டாஸ்மாக்' கடைகளில் 30-ந்தேதி அன்று ஒரே நாளில் ரூ.292.09 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக ‘டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்' நிர்வாக வசதிக்காக சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக 30-ந் தேதி அன்று சென்னை மண்டலத்தில் ரூ.63 கோடியே 44 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.56 கோடியே 72 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.55 கோடியே 93 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 63 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.56 கோடியே 37 லட்சம் என்ற அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story