தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது: ‘வெற்றி, தோல்வி எது வந்தாலும் மக்கள் பணிகளை தொடருங்கள்' - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்


தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது: ‘வெற்றி, தோல்வி எது வந்தாலும் மக்கள் பணிகளை தொடருங்கள் - தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 May 2021 11:53 PM GMT (Updated: 1 May 2021 11:53 PM GMT)

சட்டசபை தேர்தலில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் மக்கள் பணிகளை தொடருங்கள் என்று தொண்டர்களுக்கு, கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

நாளை (இன்று) வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம். புதிய தொடக்கம். இந்த தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்த்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது. வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை.

தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். ‘நாமே தீர்வு’ நல்ல முறையில் செயல்பட்டுக்கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story