சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; த.ம.மு.க ஒன்றிய செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; த.ம.மு.க ஒன்றிய செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 2 May 2021 4:41 PM GMT (Updated: 2 May 2021 4:41 PM GMT)

த.ம.மு.க ஒன்றிய செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் சத்தியமங்கலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள காந்திநகரில் வசித்து வருபவர் பாலு (வயது 45). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சத்தி ஒன்றிய செயலாளராக உள்ளார்.

பாலு தன்னுடைய காரை நேற்று முன்தினம் வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் இருந்து டமார் என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்து பார்த்தார்.

அப்போது காரின் பின்பகுதி சேதம் அடைந்து நெருப்புடன் புகை வந்துகொண்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து பாலு தீயை அணைத்தார். அதிகாலை நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து பாலு உடனே சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று உடனடியாக தெரியவில்லை. குற்றவாளிகள் பிடிபட்ட பின்னரே உண்மை தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.

இதுபற்றி பாலு கூறும்போது, பெட்ரோல் குண்டு காரின் பின் பகுதியில் விழுந்ததால் சேதம் குறைவாக உள்ளது. இதுவே காரில் மேல் பகுதியில் விழுந்து இருந்தால் கார் முழுவதும் எரிந்திருக்கும் என்றார்.

த.மு.மு.க ஒன்றிய செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story