முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2021 7:12 PM GMT (Updated: 3 May 2021 7:12 PM GMT)

முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும் அதற்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்’’ என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

அதேபோல, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “ஓ.பன்னீர்செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தி.மு.க. அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவரது ஒத்துழைப்பும் தேவை என கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story