தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி - சுகாதாரத்துறை அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 May 2021 5:06 AM GMT (Updated: 4 May 2021 5:06 AM GMT)

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2015-2016ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

நாளையுடன் ஒப்பந்தம் முடியவிருந்த நிலையில் அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் தற்போது ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.

நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது கொரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். 

Next Story