இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வருகை


இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வருகை
x
தினத்தந்தி 4 May 2021 5:02 PM GMT (Updated: 4 May 2021 5:03 PM GMT)

சென்னை விமான நிலையத்திற்கு இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள், எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இன்று 2 இந்திய விமானப்படை விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலை வந்து சேர்ந்த விமானத்தில் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் (ஒவ்வொன்றும் 46.6 லிட்டர் கொள்ளளவு கொண்டது) கொண்டு வரப்பட்டன.

அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து வந்த 2வது விமானத்தில் மேலும் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து சேர்ந்தன. இது குறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்ள உதவும் வகையில், இங்கிலாந்தில் இருந்து மேலும் 1,000 வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story