சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் சூறை; தி.மு.க.வினர் 2 பேர் கைது


சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் சூறை; தி.மு.க.வினர் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2021 7:58 PM GMT (Updated: 4 May 2021 7:58 PM GMT)

சென்னை முகப்பேரில் இயங்கி வந்த அம்மா உணவகத்துக்குள் நுழைந்து சூறையாடிய தி.மு.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை முகப்பேர் கிழக்கு 10-வது பிளாக் பகுதியில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் தினமும் 3 வேளைகளிலும் உணவருந்தி சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் தி.மு.க.வினர் சிலர் அங்குவந்து தங்களது சட்டமன்ற தேர்தலில் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் அப்பகுதியில் பட்டாசு வைத்து கோஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த அம்மா உணவகத்திற்குள் திடீரென நுழைந்த 2 பேர் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவபடத்தை தரையில் வீசி எறிந்தனர். மேலும் அங்கு உணவு தயாரிப்பதற்காக வைத்திருந்த காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தரையில் கொட்டினர். மேலும் உணவகத்தின் வாசலில் ஒட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவம் அடங்கிய பேனரையும் கிழித்து எறிந்தனர்.

தி.மு.க.வினர் கைது

இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஜெ.ஜெ.நகர் அரசு பணிமனை முன்பு ஒன்று கூடினர். அப்போது அவர்கள் அம்மா உணவகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் அங்கு வந்து அ.தி.மு.க.வினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். மேலும் இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நவசுந்தர் மற்றும் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story