தி.மு.க. வெற்றிக்காக பெண் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம்: ‘‘இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை யாரும் செய்யக்கூடாது’’


தி.மு.க. வெற்றிக்காக பெண் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம்: ‘‘இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை யாரும் செய்யக்கூடாது’’
x
தினத்தந்தி 4 May 2021 10:11 PM GMT (Updated: 4 May 2021 10:11 PM GMT)

தி.மு.க. வெற்றிக்காக பெண் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம்: ‘‘இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை யாரும் செய்யக்கூடாது’’ தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க. தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோவிலில் வேண்டிக்கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.

தி.மு.க.வை சார்ந்த தொண்டர்கள் ஏழை, எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். தி.மு.க.வின் தொண்டர்கள் இதைப்போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திடக்கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது.

வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story