சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை


சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை
x
தினத்தந்தி 4 May 2021 11:02 PM GMT (Updated: 4 May 2021 11:02 PM GMT)

சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட அந்த கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.

சட்டசபை தேர்லில் தோல்விக்கான காரணம் குறித்து அறியும் வகையில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சியின் துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் குமாரவேல், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

முன்பைவிட வேகமாக...

கூட்டத்தில், நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சி என்பது எனது குழந்தைகளைப் போலவே எனக்கு மற்றொரு குழந்தை. கட்சியின் கொடி மற்றும் வண்ணங்களைக் கூட என் குழந்தைக்கு ஆடை தேர்வு செய்வது போலவே மிகுந்த அக்கறையோடு தேர்வு செய்தேன். நான் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் பாராட்டு வாங்குவதற்கோ, கைதட்டல்கள் வாங்குவதற்கோ சொன்ன சொல் இல்லை எனது எஞ்சிய காலம் மக்களுக்கானது என்று சொன்ன சொல் என் வாழ்வியல் உண்மை.

எனவே, இந்தக் கட்சி முன்பைவிடவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் மக்கள் பணியாற்றும் என்பதை உறுதியுடன் நான் கூறிக்கொள்கிறேன். ஒரு தேர்தலின் வெற்றி, தோல்வி கட்சியின் நோக்கத்தை தடுத்து விட முடியாது. கட்சியை சீரமைக்கும் பணியினை நான் மிக விரைவில் செய்ய இருக்கிறேன். அது சற்று கடுமையாகவே இருக்கும்.

தேர்தல் ஒரு அனுபவம்

என்னோடு பயணிக்க விருப்பமில்லாதவர்கள் வெளியேறவும், விரும்புபவர்கள் உள்ளே வரவும் இரண்டு கதவுகளையும் எப்போதும் நான் திறந்தே வைத்திருக்கிறேன். எனவே, அவரவர் தங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தல் நமக்கு ஒரு அனுபவமே. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக கட்சி மக்கள் பணியாற்றும். விரைவில் கட்சிக்கு புத்துணர்ச்சியளிக்கும் புதிய முடிவுகளை நான் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story