கொரோனா சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் தரமான சிகிச்சை அளிக்க படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்


கொரோனா சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் தரமான சிகிச்சை அளிக்க படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2021 11:09 PM GMT (Updated: 4 May 2021 11:09 PM GMT)

கொரோனா சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், தரமான சிகிச்சை அளிக்க படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதாவது, நேற்று முன்தினம் தமிழக அரசு வகுத்துள்ள, கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., வருவாய்த்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்த கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன்மூலம் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனால் இதனை அனைத்துத் துறைகளும் சிறப்பாக கண்காணித்து செயல்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தரமான சிகிச்சை

தற்போது, மாநிலத்தில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் வழங்குதல் குறித்த விவரங்களை கேட்டறிந்து, அவை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும், இவை முறையாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதை உறுதி செய்யவும், வரும் சில நாட்களில் சிகிச்சைத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தால், அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்கள் இருப்பதைக் கண்காணித்து தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்க மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Next Story