மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2021 12:08 AM GMT (Updated: 5 May 2021 12:08 AM GMT)

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் திருட்டு போனது. இதுகுறித்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை, 

கொரோனாவால் மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து செலுத்துப்படுகிறது.

இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் கிடைக்கிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நலன் காக்க குறைந்த விலையில் இந்த மருந்தை அரசு விற்பனை செய்து வருகிறது.

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்து எனக் கூறப்படுவதால் தனியார் ஆஸ்பத்திரிகள் இந்த மருந்தை அதிக விலைக்கு பல்வேறு வழிகளில் வாங்குகின்றனர். எனவே இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சென்னைக்கு சென்று ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்து கள்ளச்சந்தை மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை ஆஸ்பத்திரியில் திருட்டு

இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்காக கடந்த 2-ந்தேதி 8 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பெட்டியுடன் வழங்கப்பட்டது. நேற்று அந்த பெட்டியில் இருந்த மருந்து பாட்டில்கள் மாயமானதால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சங்குமணி மற்றும் கொரோனா வார்டு பொறுப்பு அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. எனவே அவற்றை ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்கள் தான் திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று இருக்கலாம் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கருதுகிறது. இதற்கிடையில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

5 ஊழியர்கள்

ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஆஸ்பத்திரி பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தவிர ரெம்டெசிவிர் மருந்து பெட்டியில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி மருந்தாளுனர்கள், தற்காலிக பணியாளர்கள் என 5-க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருட்டு போன மருந்து பாட்டில்களின் மதிப்பு ரூ.40 ஆயிரம் எனவும், ஆனால் கள்ளச்சந்தையில் இதை பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story