காற்றில் பறக்கும் சமூக இடைவெளி: ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க ஆபத்தை உணராமல் குவியும் மக்கள்


காற்றில் பறக்கும் சமூக இடைவெளி: ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க ஆபத்தை உணராமல் குவியும் மக்கள்
x
தினத்தந்தி 5 May 2021 12:10 AM GMT (Updated: 5 May 2021 12:24 AM GMT)

‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க ஆபத்தை உணராமல் குவியும் மக்களால் சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்கிறது. இதனால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி மருந்தை வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சென்னை, 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2 கவுண்ட்டர்களில், ஒரு வயல் ரூ.1,568-க்கு விற்பனை செய்து வருகிறது.

அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 வயல்கள் வழங்கப்படுகின்றன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்து விற்பனை செய்யப்பட்டதில் இருந்து, அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினசரி 500-க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்று குறித்த ஆபத்தை உணராமல் ஒரே இடத்தில் குவிந்து வருவதால், கொரோனா பரவும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது

ஆனால் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்தநிலையில் நாளொன்றுக்கு அதிகளவில் பொதுமக்கள் அங்கு வருவதால், சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்கிறது.

மேலும், பர்னபி சாலையில் தினசரி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பலர் வரிசையில் முறையாக நிற்காமல், மருந்து வாங்க உள்ளே செல்ல நுழைய முயல்வதால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இடமே போர்களமாகிறது. அதுமட்டும் இல்லாமல், பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரிடமும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்ணீரை வரவழைக்கிறது

ஒரு சிலர், தங்களது உறவினர் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், விரைவாக மருந்தை பெற உதவுமாறும், கண்ணீர் மல்க, மருத்துவ கல்லூரி வாசலில் வரிசையில் காத்திருப்பவர்கள் முன்பு மன்றாடி நிற்பது, பலரது கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

இந்தநிலையில் நேற்று 8-வது நாளாக வினியோகம் செய்யப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கூட்டம் வழக்கம் போல் அதிகமாகவே காணப்பட்டது. நேற்று பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்த்து சில மணி நேரம் ஒரே இடத்தில் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும்...

இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதிலும் இருந்து ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு தான் பொதுமக்கள் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரே இடத்துக்கு அனைவரும் வருவதால், மருந்து கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலையும் உருவாகிறது.

எனவே தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் மருந்து வாங்க வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, முதலில் வரும் நபர்களுக்கு மருந்து வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றனர்.

Next Story