மே 16-ந்தேதி வரை தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல்


மே 16-ந்தேதி வரை தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 7 May 2021 9:05 PM GMT (Updated: 7 May 2021 9:05 PM GMT)

மே 16-ந்தேதி வரை தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு மத்திய மந்திரி தகவல்.

சென்னை, 

ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்டெசிவிர் தேவையைக் கருத்தில்கொண்டு, அது போதிய அளவில் கிடைப்பதை உறுதிசெய்ய வருகிற 16-ந்தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் குப்பிகளின் விவரத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று வெளியிட்டார். இது நாடு முழுவதும் ரெம்டெசிவிர் சுமுகமாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் எனவும், எந்த நோயாளியும் சிரமத்தைச் சந்திக்கமாட்டார் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெம்டெசிவிர் பற்றி கடந்த 1-ந்தேதி தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே 16-ந்தேதி வரையிலான புதிய ஒதுக்கீடு பட்டியலை மருந்துகள் துறையும், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகமும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மருந்துகள் துறை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகளும், புதுவைக்கு 11 ஆயிரம் குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்தை நியாயமாகப் பயன்படுத்த, இதன் வினியோகத்தை முறையாகக் கண்காணிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு தவிர, ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க, விற்பனை நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்காமல் இருந்தால், அதை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story