தொடர்ந்து பரவல் வேகமாக உயர்வு: ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 197 பேர் பலி


தொடர்ந்து பரவல் வேகமாக உயர்வு: ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 197 பேர் பலி
x
தினத்தந்தி 7 May 2021 9:12 PM GMT (Updated: 7 May 2021 9:12 PM GMT)

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் வேகமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 26,465 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 197 பேர் பலியாகினர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 15,525 ஆண்கள், 10,940 பெண்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 919 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,728 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 6,738 பேரும், செங்கல்பட்டில் 2,154 பேரும், கோவையில் 2,101 பேரும், திருவள்ளூரில் 1,384 பேரும், மதுரையில் 1,051 பேரும், காஞ்சீபுரத்தில் 857 பேரும், தூத்துக்குடியில் 855 பேரும் குறைந்தபட்சமாக சிவகங்கையில் 113 பேரும், பெரம்பலூரில் 88 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

197 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 69 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 97 ஆயிரத்து 824 ஆண்களும், 5 லட்சத்து 26 ஆயிரத்து 103 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 47 ஆயிரத்து 446 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 84 ஆயிரத்து 803 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 124 பேரும், தனியார் மருத்துவமனையில் 73 பேரும் என 197 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

17 வயது சிறுவன் பலி

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 2-ந்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், 21 வயது பிரசவித்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 30-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்தவகையில் நேற்று சென்னையில் 60 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், மதுரையில் 14 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சேலத்தில் தலா 9 பேரும், திருச்சி, கன்னியாகுமரி, கோவையில் 6 பேரும், கடலூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகரில் தலா 5 பேரும், திருவண்ணாமலை, நெல்லையில் தலா 4 பேரும், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், திருப்பத்தூரில் தலா 3 பேரும், கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், விழுப்புரத்தில் தலா 2 பேரும், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூரில் தலா ஒருவரும் என 32 மாவட்டங்களில் 197 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 15 ஆயிரத்து 171 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

22,381 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 22,381 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,634 பேரும், கோவையில் 1,491 பேரும், செங்கல்பட்டில் 1,243 பேரும், திருவள்ளூரில் 1,246 பேரும் அடங்குவர். இதுவரையில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 439 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 355 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story