கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின், கலெக்டர்களுடன் ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின், கலெக்டர்களுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2021 10:16 PM GMT (Updated: 7 May 2021 10:16 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்கள் உடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், உயிரிழப்புகளை குறைப்பது பற்றியும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகள் தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் நேற்று காணொலிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மருத்துவத் துறையும், காவல் துறையும், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை தலைவர்களும் முழுமையாக இணைந்து செயலாற்றவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இறப்புகளை குறைக்க அரும்பாடுபட்டுவரும் டாக்டர்களும், செவிலியர்களும் தங்களுடைய சீரிய பணியை தொடரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முனைப்புடன் செயல்படவேண்டும்

அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்சிஜன் போன்றவை தங்கு, தடையின்றி தொடர்ந்து கிடைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், தடுப்பூசி போடுவதில் மருத்துவத் துறையினர் மேலும் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

கொரோனா 2-வது அலை நாடுமுழுவதும் பெருகி, தமிழகத்திலும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற உடனேயே இந்த பெரும் சவாலை சமாளித்து, தமிழக மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் கடமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கடமையை நிறைவேற்றும் அதிகாரிகள், மக்களின் உயிர்காக்கும் உன்னத பணிகளில் அரசுடன் தோளோடு தோள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

போர்க்கால அடிப்படை

நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகம் தடுப்பூசி போடுவது தொடர்பான குறியீட்டில் தேசிய அளவில் முதலிடம் பெற மக்களுடன் சேர்ந்து பணியாற்றவேண்டும். சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் தொற்றின் அளவு கூடுதலாக உள்ளது. இந்த பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மாநிலத்தில் நோயின் தாக்கமும், இறப்பு எண்ணிக்கையையும் குறையும்.

புகழுரை, பொய்யுரை வேண்டாம்

இந்த பகுதிகளில் பணியாற்றும் அலுவலர்கள் நோயை கட்டுப்படுத்தவும், மருத்துவ கட்டமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். எனவே, அதிகாரிகள் உள்ளதை உள்ளபடியே முன்வைத்து, தனது செயல்பாட்டின் நுணுக்கம், தேவைகளை, அமைப்பின் குறைபாடுகளை, கடக்கவேண்டிய தூரத்தை, ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கவேண்டும். புகழுரையோ, பொய்யுரையோ எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. உள்ள உண்மையை நாம் நேருக்கு நேர் சந்திப்போம். மக்களை காப்பாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி மற்றும் அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

Next Story