சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை
x
தினத்தந்தி 7 May 2021 11:14 PM GMT (Updated: 7 May 2021 11:14 PM GMT)

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

சென்னை, 

தமிழக சட்டசபை அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 75 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் அ.தி.மு.க. மட்டும் 65 தொகுதிகளிலும், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் வெற்றி பெற்று இருந்தனர். இதுதவிர கூட்டணி கட்சிகளாக பா.ம.க. 5 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்திருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்து இருக்கிறது. அதேபோல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. இடம் பெற்று இருக்கிறது. அப்படியாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பா.ஜ.க.வின் மகளிர் அணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ‘எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை பா.ஜ.க. முடிவு செய்யும்' என்று கூறினார்.

இப்படிப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக, அ.தி.மு.க. தரப்பில் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்றனர்.

காரசார விவாதம்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, எஸ்.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் தனி அறையில் கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக (எதிர்க்கட்சி தலைவராக) யாரை தேர்வு செய்வது?, கொறடாவாக யாரை நியமிப்பது? என்பது பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அதன் பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினர். ஆனாலும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரு தரப்பினரிடையே ஒத்த கருத்து எழாத காரணத்தினால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story