நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்: இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 May 2021 12:46 PM GMT (Updated: 8 May 2021 12:46 PM GMT)

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இரு நாட்களுக்கு அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றும், நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Next Story