27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு


27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 May 2021 5:04 AM GMT (Updated: 9 May 2021 5:04 AM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். 27,397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் சூழலில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 241 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் நேற்றைய (சனிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16,101 ஆண்கள், 11,296 பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 950 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,609 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேரும், செங்கல்பட்டில் 2,458 பேரும், கோவையில் 2,117 பேரும், திருவள்ளூரில் 1,284 பேரும், மதுரையில் 1,217 பேரும், காஞ்சீபுரத்தில் 906 பேரும், தூத்துக்குடியில் 853 பேரும் குறைந்தபட்சமாக தென்காசியில் 120 பேரும், கள்ளக்குறிச்சியில் 117 பேரும், அரியலூரில் 105 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

241 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 34 லட்சத்து 18 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 13 லட்சத்து 51 ஆயிரத்து 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 13 ஆயிரத்து 925 ஆண்களும், 5 லட்சத்து 37 ஆயிரத்து 399 பெண்களும், 3-ம் பாலினத் தவர் 38 பேரும் அடங்குவர்.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 48 ஆயிரத்து 396 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 88 ஆயிரத்து 612 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 151 பேரும், தனியார் மருத்துவமனையில் 90 பேரும் என 241 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 72 பேர் பலி

அந்தவகையில் நேற்று சென்னையில் 72 பேரும், திருவள்ளூரில் 17 பேரும், காஞ்சீபுரத்தில் 14 பேரும், திருச்சியில் 12 பேரும், திருப்பத்தூரில் 11 பேரும், சேலம், செங்கல்பட்டில் தலா 10 பேரும், கடலூர், கன்னியாகுமரியில் தலா 9 பேரும், மதுரை, தஞ்சாவூரில் தலா 7 பேரும், திண்டுக்கலில் 6 பேரும், தென்காசி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் தலா 5 பேரும், கோவை, கரூர், கிருஷ்ணகிரியில் தலா 4 பேரும், தருமபுரி, நெல்லை, திருப்பூரில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தேனியில் தலா 2 பேரும், ஈரோடு, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவரும் என 31 மாவட்டங்களில் 241 உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 15 ஆயிரத்து 412 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

23,110 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 23,110 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,740 பேரும், கோவையில் 1,656 பேரும், செங்கல்பட்டில் 1,470 பேரும், திருவள்ளூரில் 1,228 பேரும் அடங்குவர். இதுவரையில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 549 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 401 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story