பஸ்கள் ஓடாது காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மதியம் வரை இயங்கும் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு


பஸ்கள் ஓடாது காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மதியம் வரை இயங்கும் நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 9 May 2021 6:19 AM GMT (Updated: 9 May 2021 6:19 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துக்கொண்டே வரு கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 27 ஆயிரத்து 397 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 241 பேர் பலியாகி உள்ளனர்.

முழு ஊரடங்கு

இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பஸ்கள் ஓடாது; டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல்

தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா நோய்த்தொற்று, பிப்ரவரி மாத கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 26 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. 23-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 7-ந் தேதி கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், தற்போது 1-5-2021 முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாளை முதல்...

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடந்த 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி முடிய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

நான் 7-5-2021 அன்று (நேற்று முன்தினம்) அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வு கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், நோய் பரவலை தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் 24-5-2021 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

இ-பதிவு முறை

இந்த முழு ஊரடங்கின்போது, பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். (https://eregister.tnega.org). ரெயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்றுவர, பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

50 சதவீத வாடிக்கையாளர்கள்

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவைதவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

முடிதிருத்தும் கடைகளுக்கு தடை

ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.

அத்தியாவசிய துறைகளான தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

தனியார் நிறுவனங்கள் இயங்க தடை

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்.

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

பஸ் போக்குவரத்துக்கு தடை

அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

எதற்கு அனுமதி; எதற்கு இல்லை

முழு ஊரடங்கின்போது உணவு வினியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின்போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், தனியார் விரைவு தபால் சேவை, ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

ஓட்டல்களில் பார்சல் சேவை

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ‘ஸ்விக்கி, ஜூமேட்டோ’ போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

பத்திரிகை துறையினர் பணியாற்றலாம்

நீதித்துறை மற்றும் கோர்ட்டுகள், நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

அரசு ஆணை எண் 348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20-4-2021-ல் பட்டியலிடப்பட்டு உள்ள, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமணத்தில் 50 பேர்

திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 பேருக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

தொலைத்தொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் - டீசல் பங்க்குகள் இயங்கும்

பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story