சென்னையில் அவசர பணிகளுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு


சென்னையில் அவசர பணிகளுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2021 5:15 AM GMT (Updated: 10 May 2021 5:15 AM GMT)

சென்னையில் அவசர பணிகளுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வரின் உத்தரவின் பேரில், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி, இரண்டு வாரக் காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக 200 பேருந்துகள் இன்று முதல் (10.05.2021) முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story