ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு வைகோ கோரிக்கை


ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு வைகோ கோரிக்கை
x
தினத்தந்தி 10 May 2021 11:17 PM GMT (Updated: 10 May 2021 11:17 PM GMT)

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் முதல்-அமைச்சருக்கு வைகோ கோரிக்கை.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற 7 பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், 2½ ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கவர்னருக்கு கோரிக்கை விடுத்தும், கவர்னர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து தமிழர்கள் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story