‘மாணவர்களின் கல்வி, எதிர்காலத்தை விட உடல் நலமே முக்கியம்’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


‘மாணவர்களின் கல்வி, எதிர்காலத்தை விட உடல் நலமே முக்கியம்’ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 11 May 2021 1:57 AM GMT (Updated: 11 May 2021 1:57 AM GMT)

மாணவர்களின் கல்வி, எதிர்காலத்தைவிட அவர்களின் உடல் நலமே முக்கியம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி வருமாறு:-

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரை மாணவர்களின் கல்வி, எதிர்காலத்தைவிட அவர்களின் உடல் நலமே முக்கியம் என்பதால் இதில் மிக மிக நிதானமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

முதல்-அமைச்சர் இதில் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதன் அடிப்படையில் அறிவிப்பை வெளியிடுவோம்.

ஆன்லைன் கல்வி

ஆன்லைன் கல்விக்கான உள்கட்டமைப்பை பொறுத்தவரை எல்லா ஊர்களிலும் ஒன்றுபோல் இருப்பதாக கூறிவிட முடியாது. நகர்ப்புறத்தில் ஒரு விதமாகவும், ஊரகப்பகுதியில் வேறு விதமாகவும் உள்ளன.

தற்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கல்வித்தொலைக்காட்சியை தவிர்த்து, ஊரகப்பகுதியிலும் ஆன்லைன் கல்வி, அங்குள்ள குழந்தைகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

தேர்வு மதிப்பீடு

இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் தேர்வுகளை நடத்துவது சிரமமாகும். அறிகுறி இல்லாத தொற்றுள்ளவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிக சாத்தியமாகி விடும்.

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, இதில் முழுக்க முழுக்க மாணவர்களின் பாதுகாப்புதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் அளிக்கும் ஆலோசனைகளை வைத்து முழு உருவத்துடன் திட்டம் வகுக்கப்படும்.

இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களில் என்ன நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது? என்பதை கவனிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன. செய்முறைத்தேர்வு மட்டுமே பாக்கியுள்ளது.

தமிழகத்தில் அப்படி இல்லை. 12-ம் வகுப்பிற்கு செய்முறைத்தேர்வுகள் முடித்துவிட்டோம். ஆனால் பிரதான தேர்வுகள் நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன.

எனவே அவற்றையெல்லாம் எப்படி மதிப்பிட வேண்டும்? முந்தைய தேர்வுகள் அல்லது ‘இண்டர்னல்’ தேர்வு ஆகியவற்றில் இருந்து மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கும் மிகவிரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்.

‘நீட்’டை ஏற்கவில்லை

‘நீட்’ தேர்வு பற்றி நாங்கள் இன்னும் எதுவும் ஆலோசிக்கவில்லை. பயிற்சி வகுப்புகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படும். எனவே அதுபற்றி இப்போது சொல்ல எதுவும் இல்லை.

‘நீட்’ தேர்வை நாங்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். எனவே அதில் தீர்வு காணும்விதமாக வரும் அறிவிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story