சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வாகிறார்கள் சட்டசபையில் நாளை பொறுப்பேற்பு


சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வாகிறார்கள் சட்டசபையில் நாளை பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 11 May 2021 2:53 AM GMT (Updated: 11 May 2021 2:53 AM GMT)

சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். சட்டசபையில் நாளை (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.

சென்னை, 

தமிழகத்தில் நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 159 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அன்றைய தினமே 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று பதவியேற்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செவ்வாய்கிழமை) அவரது முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கின்றனர்.

சபாநாயகர் அப்பாவு

நாளை (புதன்கிழமை) சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களை தி.மு.க. தலைமை நேற்று அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

12-ந் தேதி (நாளை) நடைபெற உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில், தி.மு.க. சார்பில் சபாநாயகராக திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவுவும், துணை சபாநாயகராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டியின்றி தேர்வாகிறார்கள்

எனவே, நாளைய சட்டசபை கூட்டத்தில், சபாநாயகராக மு.அப்பாவுவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மு.அப்பாவு, 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.

2001-ம் ஆண்டு அதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இன்று வேட்புமனு தாக்கல்

2016-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.அப்பாவு போட்டியிட்டாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

தற்போது, தி.மு.க. சார்பில் சபாநாயகராக மு.அப்பாவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரும் இன்று (செவ்வாய்கிழமை) பகல் 12 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். நாளைய சட்டசபை கூட்டத்தில் அதிகாரபூர்வாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

துணை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள கு.பிச்சாண்டி முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். சட்டசபையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story