புதுச்சேரியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. சதி; தி.மு.க. தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்


புதுச்சேரியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. சதி; தி.மு.க. தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2021 3:10 PM GMT (Updated: 11 May 2021 3:10 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, சதி நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. .சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க தி.மு.க. உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பா.ஜ.க. இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக, பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் அவசர அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 6 இடங்களை கைப்பற்றியிருக்கும் தி.மு.க. உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். நட்புக்கு துரோகம் இழைக்கும் பா.ஜ.க.வை தோளில் சுமக்கும் என்.ஆர்.காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story