சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு: ஆட்டோ, கார்களுக்கு சாலைவரி செலுத்த கால அவகாசம் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு: ஆட்டோ, கார்களுக்கு சாலைவரி செலுத்த கால அவகாசம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2021 11:54 PM GMT (Updated: 11 May 2021 11:54 PM GMT)

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கடன் பெற முத்திரைத்தாள் பதிவு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், ஆட்டோ, கார்களுக்கு சாலை வரி செலுத்த 3 மாத காலஅவகாசம் அளிப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முடிவுகளின் விவரம் வருமாறு:-

* சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 60 சதவீத தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

* இந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்கள் வருகிற டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகின்றன.

கால அவகாசம் நீட்டிப்பு

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கனவே 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 31-12-2021 வரை 9 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

* கடன் உத்தரவாத நிதி ஆதாரத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் பெறப்பட்ட கடனுக்கான 5 சதவீத பின் முனை வட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும்.

* சிட்கோ மனைகள், பாஸ்ட் டிராக் அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

* சிட்கோ நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றை செலுத்துவதற்கு, மேலும் 6 மாத கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், (சிட்கோ தொழிற்பேட்டைகள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் உள்பட) பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து போடப்பட்டுள்ளது. தகுதியுடைய அனைவருக்கும் சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை வரி கட்டணங்களுக்கு...

* ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு ஆட்டோ மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலைவரி கட்டணங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது.

* சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தப்படும்.

* இந்த மாதத்துடன் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணத்தொகையை செலுத்துவதற்கு காலநீட்டிப்பு வழங்கக்கோரி மத்திய அரசும், ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பும் வலியுறுத்தப்படும்.

* இந்த மாதத்தில் காலாவதியாகும் தீயணைப்புத் துறை, தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய சட்டரீதியான உரிமங்கள் மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்படுகிறது. இதுகுறித்து, உரிய ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகள் இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் வரி செலுத்த...

* தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் 3 தவணைகளாக வழங்குவதற்கு பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஒரே தவணையாக தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.

* பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில்வரியை செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story