மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2021 12:19 AM GMT (Updated: 12 May 2021 12:19 AM GMT)

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பதாக வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவத்துறை பணியாளர்களின் தியாகம் அளவிட முடியாதது. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள். கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனாவுக்காக மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து விட்டது.

இந்த நிலையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பான சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.அதற்காக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி முடிக்கும் வரை, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணியின் போது உயிர்த்தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியுதவியை தாமதமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவை அனைத்தையும் விட, மருத்துவத்துறையினரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story