அரசு செலவிலோ, சொந்த செலவிலோ என்னுடைய நூல்களை அரசு விழாக்களில் பரிசாக வினியோகிக்க வேண்டாம் தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள்


அரசு செலவிலோ, சொந்த செலவிலோ என்னுடைய நூல்களை அரசு விழாக்களில் பரிசாக வினியோகிக்க வேண்டாம் தலைமைச் செயலாளர் இறையன்பு வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 May 2021 2:57 AM GMT (Updated: 12 May 2021 2:57 AM GMT)

அரசு செலவிலோ, சொந்த செலவிலோ என்னுடைய நூல்களை அரசு விழாக்களில் பரிசாக வினியோகிக்க வேண்டாம் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நான் பணிநேரம் முடிந்தபின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக்கல்வித் துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக்கூடாது என்கிற உத்தரவே அது.

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்தவகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.

பரிசாக வினியோகிக்க வேண்டாம்

அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.

இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story