முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: பழ வியாபாரம், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி


முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு: பழ வியாபாரம், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி
x
தினத்தந்தி 12 May 2021 3:02 AM GMT (Updated: 12 May 2021 3:02 AM GMT)

பழ வியாபாரம் செய்யவும், நாட்டு மருந்து கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் தளர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.

பழ வியாபாரம் - நாட்டு மருந்து கடைகள்

காய்கறி, மலர்கள் விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. அனைத்து தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம்’’ 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும்.

இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.

ஆங்கில மருந்து கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்து கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story