மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி


மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி
x
தினத்தந்தி 12 May 2021 10:10 AM GMT (Updated: 12 May 2021 10:10 AM GMT)

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்திப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் அச்சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக் காலமான, ஏப்ரல், மே, ஜூன்-மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்ததற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டரில், “கொரோனா பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஊக்கத்தொகையை அறிவித்துள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.





Next Story