உலக நர்சுகள் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின், நர்சுகளுடன் கலந்துரையாடல் ‘கருணையின் வடிவமாக உங்களை பார்க்கிறேன்' என்று புகழாரம்


உலக நர்சுகள் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின், நர்சுகளுடன் கலந்துரையாடல் ‘கருணையின் வடிவமாக உங்களை பார்க்கிறேன் என்று புகழாரம்
x
தினத்தந்தி 13 May 2021 12:19 AM GMT (Updated: 13 May 2021 12:19 AM GMT)

உலக நர்சுகள் தினத்தை முன்னிட்டு நர்சுகளுடன் மு.க.ஸ்டாலின் ‘காணொலி' வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர், நர்சுகளை கருணையின் வடிவம் என்று புகழ்ந்து கூறினார்.

சென்னை, 

உலக நர்சுகள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதலில் உங்கள் அனைவருக்கும் நர்சுகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, ‘கருணையின் வடிவம்' என்று நர்சுகளை சொல்வேன்.

அன்பு செலுத்துவதும், அதை வெளிப்படுத்துவதும் இணைந்ததுதான் உங்களது வாழ்க்கை. நர்ஸ் என்பதை ஒரு வேலையாக இல்லாமல் சேவையாக ஆற்றிவரும் உங்களை பாராட்டுகிறேன்.

நன்றியின் அடையாளமாக...

கடந்த ஓராண்டு காலம் கொரோனா என்ற பெருந்தொற்று காலம். உங்கள் சேவை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதை எப்படி எதிர் கொண்டீர்கள் என்பதை ஒவ்வொருவராக சொல்லுங்கள்.

(நர்சுகளின் பணி நேரம், அவர்கள் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம், அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்)

டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சேவைக்கு பணத்தை ஈடாக கொடுத்துவிட முடியாது. ஆனால் அரசு காட்டும் நன்றியின் அடையாளமாக, நிதி அறிவிப்பை இன்றைக்கு (நேற்று) காலையில் அறிவித்துள்ளேன்.

பாராட்டு

இந்த நிதி என்பது எங்களது நன்றி உணர்ச்சிக்கான அடையாளமாக வழங்குகிறோம். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவித்துள்ளோம். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காக்கும் பணியையும் மும்முரமாக முடுக்கி விட்டிருக்கிறோம்.

இதற்கு முழு உதவியும் செய்து தங்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்படும் நர்சுகள் அனைவரையும் மீண்டும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கலந்துரையாடினார்.

கொரோனா பேரிடரில் முன்கள வீரர்களாக கடமையாற்றும் தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் நர்சுகளின் நலன்களும், உரிமைகளும் காக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நன்றி கலந்த வாழ்த்து

முன்னதாக உலக நர்சுகள் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘கொரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானது தான். இதில் முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் நர்சுகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.


Next Story