ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது


ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது
x
தினத்தந்தி 13 May 2021 3:06 AM GMT (Updated: 13 May 2021 3:06 AM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான அக்சிஜனுடன் முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது.

தூத்துக்குடி,

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது. தொடர்ந்து கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஆலையில் ஆய்வு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தியான ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி அளவில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி தொடங்கியது. ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் இதனை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

முதற்கட்டமாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் இடங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட உள்ளது.

Next Story