18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட வெளிநாடுகளில் இருந்து தடு்ப்பூசி இறக்குமதி கொரோனா தடுப்பு பணியில் மு.க.ஸ்டாலின் தீவிரம்


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட வெளிநாடுகளில் இருந்து தடு்ப்பூசி இறக்குமதி கொரோனா தடுப்பு பணியில் மு.க.ஸ்டாலின் தீவிரம்
x
தினத்தந்தி 13 May 2021 4:18 AM GMT (Updated: 13 May 2021 4:18 AM GMT)

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக ெவளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்காக உலகளாவிய டெண்டர் கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, 

கொரோனா தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.

ஆய்வு கூட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெற்ற சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள முதல்-அமைச்சர் அறையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி இறக்குமதி

இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீடு, 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

ஆக்சிஜன் ஒதுக்கீடு

மேலும், தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது.

எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிறமாநிலங்களில் உள்ள எக்கு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து தமிழகத்திற்கு ரெயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக வினியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில்துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் உத்தரவிட்டார்.

பங்கேற்றவர்கள்

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story