"பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை குறித்து ஆலோசிக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன்


பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை குறித்து ஆலோசிக்கப்படும் - போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 13 May 2021 8:44 AM GMT (Updated: 13 May 2021 8:44 AM GMT)

பேருந்துகளில் ஆக்சிஜன் சப்ளை குறித்து ஆலோசிக்கப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டர்ர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதாவது:-

கோயம்பேட்டில் நகரப் பேருந்துகளில் பயணித்த பெண்களிடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் குறித்து கேட்டேன். பெண்கள் நாள் ஒன்றுக்கு ரு.70 மிச்சம், மாதம் ரூ.2000 ஆயிரம் மிச்சமாகிறது என்று தெரிவித்தனர். மிக அருமையான திட்டம் என்று தெரிவித்தனர். இந்த அருமையான திட்டத்தை முதல்வர் அமல்படுத்தியுள்ளது பெண்களிடேயை பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுமக்களுக்கு நிறைவான பேருந்து சேவை அளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் வேண்டுகோள். நல்ல நிர்வாகம் மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்பது முதல் நோக்கம்.

போக்குவரத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை எப்படி ஈடுகட்ட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. முதலில் 1.6 கோடி பேர் பிரயாணம் செய்தனர். கொரோனா தொற்றுக்கு பின் அது 90 லட்சமாக குறைந்துள்ளது. இரண்டாவது ஆலையின் தாக்கத்தால் தற்போது சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவைத்தவிர சுங்கக்கட்டணம் பாக்கி வேறு உள்ளது.

பேருந்துகளில் ஏற்கெனவே அமலில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை விரைவுப்படுத்துதல், பேருந்து வழிதடங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் "சலோ ஆப்" பயன்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கொரோனா நோய்த்தோற்று காலத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும் துறையாக "தமிழக போக்குவரத்துதுறை" விளங்கும். முன்களப்பணியார்களை கொண்டு கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறோம். கூடுதலாக பேருந்துகள் தேவைப்பட்டால் கொண்டு வருவோம்.

ஆக்சிஜன் பிரச்னையுடன் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் இல்லாமல் அவதியுறும் நிலையில், பேருந்துகளில் ஆக்சிஜன் செட்டப்புடன் படுக்கை வசதியுடன் பயன்படுத்த சாத்தியம் உள்ளதா என சுகாதாரத்துறையுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் ஊரடங்கு நேரத்தில் பயணிக்கவும் விரைவில் முடிவெடுக்கப்படும்.

சாதாரண பேருந்துகள் தற்போது கொரோனா தொற்று காரணமாக குறைவாக இயக்கப்படுகிறது. தொற்று பாதிப்பு நிலைமை சரியானவுடன் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

Next Story