அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்களுடன் கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு


அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்களுடன் கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு
x
தினத்தந்தி 14 May 2021 3:00 AM GMT (Updated: 14 May 2021 3:00 AM GMT)

கொரோனா சிறப்பு நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்த கையோடு அந்த திட்டத்தை கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் நாளை (15-ந்தேதி) முதல் ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்பட உள்ளது.

14 பொருட்கள்

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘இந்த மளிகை பொருட்கள் விலையானது அமுதம் பல்பொருள் அங்காடிகளில் வழங்கப்படும் பொருட்களின் கொள்முதல் விலையின் (வரிகள் உள்பட) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

14 மளிகை பொருட்கள், துணிப்பையுடன் சேர்த்து 15 பொருட்களுக்கு கொள்முதல் விலையாக ரூ.397.33 கணக்கிடப்பட்டுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளில்...

கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை கொள்முதல் செய்யும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த பொருட்கள் ‘பேக்கிங்’ செய்யும் பணிகள் நடைபெறும்.

இந்த நிவாரண பொருட்கள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி அன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story