தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி 14 பேர் படுகாயம்


தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 May 2021 3:18 AM GMT (Updated: 14 May 2021 3:18 AM GMT)

கடலூரில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர்,

கடலூர் முதுநகர் அருகே சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் குடிகாடு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா காரணமாக 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

பாய்லர் வெடித்தது

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணியிலும், சிலர் தொழிற்சாலை பராமரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது காலை 7.30 மணி அளவில் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் அதிக அழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அதில் இருந்த எத்திலின் டைகுளோரைடு மற்றும் ஐசோபுரோபைல் ஆல்ஹகால் ஆகிய ரசாயன வாயு வெண் புகையுடன் வெளியேறியது. அப்போது அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து இறந்தார்.

தொழிலாளர்கள் பலி

பாய்லர் வெடித்து சிதறிய அடுத்த சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீதும் தீப்பற்றியது. இதில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 14 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கள் கடலூர் முதுநகர் காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெரு செந்தில்குமார் மனைவி சவிதா (வயது 35), பழைய வண்டிப்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார்(42), செம்மங்குப்பம் கருணாகரன் மகன் கணபதி (25) பரங்கிப்பேட்டை விஜயகுமார் மகன் விசேஷராஜ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

விபத்து தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌

Next Story