புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்


புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 14 May 2021 10:10 AM GMT (Updated: 14 May 2021 11:33 AM GMT)

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

புதிய புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. 

இன்று மேலும் வலுவடைந்து காற்றுழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாகவும் அதனை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

 இதன்காரணமாக இன்றைய தினம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் அதி கன மழை பெய்யும் எனவும் தென்காசி,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர்,நாமக்கல் , சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வரும் 17 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மேக மூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story