ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு


ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா சிகிச்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2021 2:09 AM GMT (Updated: 16 May 2021 2:09 AM GMT)

கொரோனா சிகிச்சை மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் ‘ரெம்டெசிவிர்’, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. இந்த இக்கட்டான நெருக்கடி சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயிர்காக்கும் இந்த பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்களை போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் ரகசியமாக கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுகின்றன.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக போலீஸ்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது, எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராக செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மக்களுக்கான இந்த அரசு இரவு-பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தைவிழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில், சில சமூகவிரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

தடுப்பூசி இறக்குமதி, ‘ரெம்டெசிவிர்’ மருந்து வினியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story