டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் ‘கொரோனாவுக்கு சுயவைத்தியம் செய்துகொள்வது தவறான செயல்’; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை


டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் ‘கொரோனாவுக்கு சுயவைத்தியம் செய்துகொள்வது தவறான செயல்’; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 May 2021 5:18 PM GMT (Updated: 17 May 2021 5:18 PM GMT)

டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் கொரோனாவுக்கு சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது தவறான செயலாகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுயவைத்தியம் தவறு

முதல்-அமைச்சரின் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டும் நெறிமுறைகளின்படி மருத்துவ கிசிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் தவறாகும்.

அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொதுமக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

முறையான சிகிச்சை

இதுமட்டுமல்லாமல் அவர்கள் வாயை திறந்து புகையை பிடிக்கும்போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ நெறிமுறைகளின்படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு டாக்டரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோரோனா வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாகவும் இருப்பதால் டாக்டருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக்கூடாது.

முகநூல், சமூக வலைதளங்கள்

சித்தா கொரோனா மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது டாக்டர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது.

எனவே, பொதுமக்கள் டாக்டரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களை வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 


Next Story