தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 May 2021 2:36 AM GMT (Updated: 20 May 2021 2:36 AM GMT)

தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்த தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘ரெம்டெசிவிர்' மருந்து விற்பனையை மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை, 

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்' மருந்தை வாங்குவதற்கு நோயாளிகளின் குடும்பத்தினர் அலைவதையும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், இந்த மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், அரசின் இணையதள வழியாக பதிவு செய்து, தனியார் ஆஸ்பத்திரிகள் ‘ரெம்டெசிவிர்' மருந்தை வாங்கிக்கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அவர், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனையை நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் ஆஸ்பத்திரிகள் இணையதளத்தில் பதிவு செய்து, ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, ‘ரெம்டெசிவிர்’ மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யும் ஆஸ்பத்திரிகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.

இந்த முறையில் இதுவரை 343 தனியார் ஆஸ்பத்திரிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 151 ஆஸ்பத்திரிகள் ‘ரெம்டெசிவிர்' மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இதனை முதல்-அமைச்சர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 25 ஆஸ்பத்திரிகளுக்கு 960 ‘ரெம்டெசிவிர்' மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தி.மு.க. எம்.பி., தயாநிதி மாறன், ஐ.பரந்தாமன் எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story