கமல்ஹாசன் கட்சிக்கு என்னதான் ஆச்சு...? இன்று மேலும் ஒரு முக்கிய தலைவர் விலகல்


கமல்ஹாசன் கட்சிக்கு என்னதான் ஆச்சு...?  இன்று  மேலும் ஒரு முக்கிய தலைவர் விலகல்
x
தினத்தந்தி 20 May 2021 6:59 AM GMT (Updated: 20 May 2021 7:24 AM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்து உள்ளார்.

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. தேர்தல் முடிவை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலர் குமாரவேல், தலைமை அலுவலக பொது செயலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சமூக ஆர்வலர் பத்மபிரியா உள்ளிட்டோர்  விலகினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்த  எம்.முருகானந்தம். நேற்று விலகினார். இவர்  திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்தவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு படுதோல்வியை தழுவினார்.

அவருடன் சேர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொழில் முனைவோர் அணி செயலாளர் வீரசக்தி, துணை செயலாளர்கள் அய்யனார், விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் திருவெறும்பூர் தொகுதியில் 414 வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்கள் 200 பேர் மற்றும் 2,000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்பும், ஊடகங்கள் முன்பும் முன்வைத்துவிட்டார்கள். முன் வைத்த காரணிகளில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிதாக தான் சொல்வதற்கு எதுவும் இல்லை. கட்சியில் வரலாறு படைக்க வேண்டியதாக இருக்க வேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமோ என்ற கோபமும், ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. 

தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை கைவிட்டு மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். இதன் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Next Story