வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2021 8:47 PM GMT (Updated: 22 May 2021 8:47 PM GMT)

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெப்பச்சலன மழை
மத்திய கிழக்கு அரபிக் கடலில் அண்மையில் உருவான டவ் தே புயல் காரணமாக கடந்த வாரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. மேலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.அதன்படி, வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் வருகிற 26-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
குறிப்பாக கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை (திங்கட்கிழமை) புயலாக வலுவடையும் என்றும், அந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 26-ந் தேதி
ஒடிசாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், மீனவர்கள் இன்று தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதே போன்று, நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 26-ந்தேதி வரை, தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதி, மத்திய வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று மதியம் 1 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 9 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 6 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி 
உள்ளது. இதே போன்று, பல பகுதிகளில் 3 சென்டி மீட்டர் முதல் 4 சென்டி மீட்டர் வரை மழை அளவு பதிவாகி உள்ளது.

Next Story